நீடாமங்கலத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 6 பேர் கைது


நீடாமங்கலத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 12:20 PM GMT (Updated: 22 July 2021 12:20 PM GMT)

நீடாமங்கலத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலத்தில் நேற்றுமுன்தினம் மாலை காரைக்காலிலிருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் விரைவு ெரயிலுக்காக ெரயில்வேகேட் மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 6.10 மணிக்கு ெரயில் வந்து சென்றது. ரெயில்வே கேட் திறந்த பிறகு நெடுஞ்சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டன. அப்போது நீடாமங்கலம் வெண்ணாறு பாலம் உழவர்சந்தை அருகில் சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி செல்லும் அரசு விரைவு பஸ் நகர்ந்து வந்தது.

அப்போது எதிரே வந்த 3 மோட்டார்சைக்கிள்கள் பஸ்சுக்குள் சிக்கி சேதமடைந்தன. ஆனால் மோட்டார்சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அப்போது அங்கு இருந்த சிலர் அரசு பஸ்சின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதில் காயமடைந்த பஸ் டிரைவர் திருவாரூர் மாவட்டம் மணக்கரை ஓவர்ச்சேரியை சேர்ந்த இளங்கோவனை (வயது57) மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மன்னார்குடி போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் மற்றும் நீடாமங்கலம் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று அரசு பஸ் கண்ணாடியை உடைத்த கொட்டையூர் சர்வமான்யம் பகுதியை சேர்ந்த கலையரசன் (30), அதேபகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (25), மாதவன் (32), மணிகண்டன் (23), சுந்தர்ராஜ் (21), மேலபூவனூரை சேர்ந்த சபரிநாதன் (20) ஆகிய 6 பேரை நீடாமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Next Story