திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் தரிசனம்


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 22 July 2021 1:10 PM GMT (Updated: 22 July 2021 1:10 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி் தரிசனம் செய்தனர்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பழமை வாய்ந்த ருத்ர கோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில் மேற்கு முகமாய் அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது சிறப்பாகும். இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அப்போது சிவபெருமான்- நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள கைலாசநாதர், வடிவழகி அம்மன், நந்தியம் பெருமாள் ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல வடுவூர் அருகே உள்ள எடஅன்னவாசல் நாகநாதசாமி கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அப்போது நந்தியம்பெருமாள் மற்றும் நாகநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமக்கோட்டையில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர்கோவில், கோகமுகேஸ்வரர்கோவில், நரிக்குடிஎமனேஸ்வரர்கோவில், பூவனூர்சதுரங்கவல்லபநாதர்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

குடவாசல் அருகே உள்ள திருவிழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.

இதேபோல் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், சீதக்கமங்கலம் மூலநாதர் கோவில், குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சத்ருசம்ஹார மூர்த்தி கோவில் ஆகிய கோவில்களில் நந்திபகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு நந்திபகவானை வழிபட்டனர்.

Next Story