ஆப்பிள் பழ சீசன் தொடக்கம்


ஆப்பிள் பழ சீசன் தொடக்கம்
x
தினத்தந்தி 22 July 2021 3:36 PM GMT (Updated: 22 July 2021 3:36 PM GMT)

கொடைக்கானல் பகுதியில் ஆப்பிள் பழ சீசன் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்: 

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆயிரக்கணக்கான ஆப்பிள் மரங்கள் இருந்தன. அதில் விளையும் ஆப்பிள் பழங்கள் புளிப்புச் சுவை அதிகம் இருந்ததால் விற்பனை செய்ய முடியவில்லை. 

இதனால் ஏராளமான ஆப்பிள் மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றினர். இருப்பினும் நகர் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பழப்பண்ணை, அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், ஏரிச்சாலை உள்ளிட்ட சில இடங்களில் ஆப்பிள் மரங்கள் அதிகம் உள்ளன. ஆண்டுதோறும் வழக்கமாக ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குளிர் காலத்தில் ஆப்பிள் பழம் சீசன் தொடங்கும். 

தற்போது இந்த மாதம் கடந்த சில தினங்களாக அதிகம் குளிர் நிலவுவதால் ஆப்பிள் பழ சீசன் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, ஆப்பிள் பழங்கள் அதிக அளவில் காய்க்க தொடங்கி உள்ளது. காய்களாக இருக்கும் போது புளிப்பு சுவை உள்ளதாக இருக்கும். எனவே நன்றாக பழுத்த பின்னரே அவை பறிக்கப்படும். 

தற்போது காற்று அதிகமாக வீசுவதால் ஏராளமான ஆப்பிள் காய்கள் உதிர்ந்து விட்டன. இந்த ஆப்பிள் பழங்கள் செப்டம்பர் மாதம் முதல் மரங்களிலேயே பழுக்க தொடங்கி விடும். அப்போது அவை பறிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும் என்றனர். 

Next Story