இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி


இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 22 July 2021 4:37 PM GMT (Updated: 22 July 2021 4:37 PM GMT)

சாணார்பட்டி அருகே இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோபால்பட்டியை அடுத்துள்ள ஜோத்தாம்பட்டியில் பொம்முதாத்தா சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் காளை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. 

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தினத்தில் காளையை அலங்கரித்து கோவிலை சுற்றி வலம் வருவது வழக்கம். இந்த காளை நிலக்கோட்டை, கரூர், தேனி, குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் காளைகளுக்கிடையே நடைபெறும் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்றுள்ளது. 

24 வயதுடைய இந்த காளை நேற்றுமுன்தினம் மாலை இறந்தது. இதைத்தொடர்ந்து கோவில் காளையின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொழுக்கட்டை படையல், பூஜை பொருட்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இளைஞர்கள் தேவராட்டம் ஆடினர். ஜோத்தாம்பட்டி, கோட்டைபட்டி, தலையாரிபட்டி, பூவகிழவன்பட்டியை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கோவில் காளை உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

அதன்பின்னர் உறுமி மேளத்துடன் கோவில் காளையின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. 

Next Story