பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.சி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.சி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 July 2021 5:09 PM GMT (Updated: 22 July 2021 5:09 PM GMT)

பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.சி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிப்பாளையம்:-

பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.சி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பணி நிரந்தரம் செய்யக்கோரி

நாகையை அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (சி.பி.சி.எல்.) ஆலை உள்ளது. இந்த ஆலையில் ரூ.38 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 94 பேரை பணியில் இருந்து விடுவிப்பதாக நிர்வாகம் தெரிவித்தது. 
இதையடுத்து பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுடன், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. தொழிலாளர் துறை துணை இயக்குனர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு காணப்படவில்லை. 

காத்திருப்பு போராட்டம்

இந்த நிலையில் சி.பி.சி.எல். அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் கண்ணன் தலைமையில் நேற்று 94 ஒப்பந்த தொழிலாளர்களும் நாகை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.  அவர்கள் 94 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணியை இழக்கும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 

கோரிக்கை மனு

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதையடுத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரனிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story