தொடர் மழையால் சாய்ந்த பூண்டு செடிகள்


தொடர் மழையால் சாய்ந்த பூண்டு செடிகள்
x
தினத்தந்தி 22 July 2021 6:03 PM GMT (Updated: 22 July 2021 6:04 PM GMT)

ஊட்டியில் தொடர் மழையால் பூண்டு செடிகள் சாய்ந்துவிட்டன. இதனால் முன்கூட்டியே விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

ஊட்டி,

ஊட்டியில் தொடர் மழையால் பூண்டு செடிகள் சாய்ந்துவிட்டன. இதனால் முன்கூட்டியே விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

தொடர் மழை

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விளைநிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பூண்டு செடிகள் கீழே சாய்ந்தன. நிலம் எப்போதும் ஈரப்பதமாக இருப்பதால் பூண்டு செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

இதையடுத்து விவசாயிகள் மழையால் கீழே சாய்ந்த பூண்டு செடிகள் அழுகாமல் இருக்க முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாய்ந்து கிடக்கும் செடிகளை தொழிலாளர்கள் பிடிங்கி வைக்கின்றனர். பின்னர் நிலத்தின் ஓரிடத்தில் பூண்டு பிரிக்கப்படாமல் செடிகளோடு வரிசையாக அடுக்கி வைக்கப்படுகிறது.

கிலோ ரூ.150 வரை...

மேலும் மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு உள்ளது. இதற்காக சுற்றிலும் கம்புகள் வைத்து அதன்மேல் தார்பாய் போட்டு பாதுகாக்கப்படுகிறது. வழக்கமாக பூண்டு விதைத்து அறுவடைக்கு தயாராக 120 நாட்கள் ஆகும். தொடர் மழையால் முன்கூட்டியே அறுவடை செய்யப்படுவதால் அதன் தரம் எதிர்பார்த்த அளவு இருக்காது என்று கூறப்படுகிறது. 
இதுகுறித்து பூண்டு பயிரிட்ட விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஒரு கிலோ பூண்டு ரூ.200 வரை விற்பனையானது. தற்போது ரூ.100 முதல் ரூ.150 வரை விலை கிடைக்கிறது. இதற்கிடையே அறுவடைக்கு தயாராகி வந்த பூண்டு செடிகள் மழையால் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அறுவடை

பூண்டு மற்றும் அதன் செடிகள் அழுகி வருவதால் விரைவாக அறுவடை செய்து வருகிறோம். இருப்பினும் செடிகளை தனியாகவும், பூண்டுகளை தனியாகவும் பிரிப்பதற்கு காய்ந்தால் மட்டுமே முடியும். தொடர்ந்து மழை பெய்வதால் தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகிறோம்.

மழை விட்டால்தான் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்ல முடியும். அவை அழுகி வருவதால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. மேலும் வேலைக்கு தொழிலாளர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு கூலி போன்ற செலவுகளை ஈடுகட்ட முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story