கர்நாடக மாநிலத்தில் தடுப்பணை கட்டியதால் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் மார்க்கண்டேய நதி தமிழக விவசாயிகள் வேதனை


கர்நாடக மாநிலத்தில் தடுப்பணை கட்டியதால் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் மார்க்கண்டேய நதி தமிழக விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 22 July 2021 6:14 PM GMT (Updated: 22 July 2021 6:14 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் தடுப்பணை கட்டியதால் தமிழகத்தில் பாய்ந்தோடும் மார்க்கண்டேய நதி வறண்டு கிடப்பதால் தமிழக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வேப்பனப்பள்ளி:

மார்க்கண்டேய நதி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள சிறுசிறு ஏரிகளிலும், குளங்களிலும், குட்டைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏரிகளில் மழைநீர் தற்போது நிரம்பி வருகிறது. 
ஆனால் இந்த பகுதியில் பிரதான நீர் ஆதாரமான மார்க்கண்டேய நதியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து மார்க்கண்டேய நதி தமிழகத்திற்குள் வேப்பனப்பள்ளி பகுதியில் நுழைந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. 
இந்த மார்க்கண்டேய நதி நாச்சிக்குப்பம், குருபரப்பள்ளி, நெடுசாலை, சின்ன கொத்தூர், தீர்த்தம் மாரசந்திரம், குப்பச்சிபாறை எண்ணே கொள்ளு வழியாக ஒம்பல கட்டு என்னுமிடத்தில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. 
இந்த பகுதிகளில் இருந்து மார்க்கண்டேய நதி செல்லும் போது ஆற்றில் வரும் தண்ணீர் மூலம் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்றன.
தண்ணீர் தடைபட்டது
ஆனால் தற்போது கர்நாடக மாநிலத்தில் யார்கோள் என்னும் இடத்தில் அந்த மாநில அரசு தடுப்பணை கட்டியதால், தமிழகத்திற்கு வரும் தண்ணீர் முழுவதுமாக தடைபட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் மார்க்கண்டேய நதி கிளைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. 
மழை பெய்தாலும் மார்க்கண்டேய நதியில், தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

Next Story