கருத்தரிப்பு மையத்தில் இளம்பெண் திடீர் சாவு


கருத்தரிப்பு மையத்தில் இளம்பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 22 July 2021 7:56 PM GMT (Updated: 22 July 2021 7:56 PM GMT)

நெல்லையில் கருத்தரிப்பு மையத்தில் இளம்பெண் திடீரென இறந்தார்.

நெல்லை:
நெல்லையில் கருத்தரிப்பு மையத்தில் இளம்பெண் திடீரென இறந்தார். டாக்டர்களின் தவறான சிகிச்சையே காரணம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இளம்பெண் திடீர் சாவு

கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துகோணம் பகுதியை சேர்ந்தவர் சுதன். கூலி தொழிலாளியான இவருடைய மனைவி இந்துராணி (வயது 26). முதுநிலை பட்டதாரி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் இந்துராணி நெல்லையில் உள்ள ஒரு கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெறுவதற்கு குடும்பத்துடன் வந்தார்.  கடந்த 19-ந் தேதி கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சைக்காக இந்துராணி சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இந்துராணி திடீரென்று இறந்து விட்டார். 

உறவினர்கள் போராட்டம்

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்துராணியின் உறவினர்கள், நேற்று காலையில் கருத்தரிப்பு மையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'இந்துராணி இறந்ததற்கு டாக்டர்களின் தவறான சிகிச்சைதான் காரணம். எனவே அவர்கள் மீதும், நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துராணி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம்' என்றனர். 

போலீசார் விசாரணை

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போலீசார் இந்துராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story