தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 12 பேர் கைது


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 12 பேர் கைது
x
தினத்தந்தி 23 July 2021 8:08 PM GMT (Updated: 23 July 2021 8:09 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்,

அரியலூர் போலீசார் நகரில் பல இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். இதில் பெருமாள் கோவில் தெருவில் முருகானந்தம் என்பவரது கடையில் 5.5 கிலோ, கபிரியேல் தெருவில் சாமுவேல் என்பவரது கடையில் 10 கிலோ, விளாங்காரத் தெருவில் சங்கர் என்பவரது கடையில் 2.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர். மேலும் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் ஆண்டிமடம் கடைவீதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15,160 மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் குமாரவேலை(வயது44) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம், உடையார்பாளையம்
ஜெயங்கொண்டம் போலீசார் ஜெயங்கொண்டம், சின்னவளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்டவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக ராஜஸ்தானை சேர்ந்த கலாராமிடம் இருந்து புகையிலை பொருட்கள் அடங்கிய 1,650 பாக்கெட்டுகளையும், சின்னவளையம் பகுதியில் சிவகுருநாதனிடம் இருந்து புகையிலை பொருட்கள் அடங்கிய 870 பாக்கெட்டுகளையும், அதே பகுதியில் குமார் என்பவரது கடையில் இருந்து புகையிலை பொருட்கள் அடங்கிய 300 பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து புகையிலை பொருட்கள் விற்றதாக கலாராம்(26), சிவகுருநாதன் (52), குமார்(52) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ரகுபதி(48), சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த நீலமேகம் (53), சபாபதி (63), தத்தனூர் கீழவெளியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (39), தத்தனூர் மாந்தோப்பைச் சேர்ந்த செல்வம் (45) ஆகியோர் தங்களது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story