போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 24 July 2021 8:29 PM GMT (Updated: 24 July 2021 8:29 PM GMT)

பண்ருட்டி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல சினிமா நடிகர் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

புதுப்பேட்டை, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு மகன் சிவமணி(வயது 38). இவர் திட்டமிட்டப்படி என்ற படத்தை தயாரித்து, அவரே நடித்துள்ளார். சிவமணி மீது கொலை, மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. 

இந்த வழக்குகள் தொடர்பாக சிவமணியிடம் விசாரிப்பதற்காக புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அவரது வீட்டுக்கு சென்றிருந்தனர். 

4 பேர் கைது 

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை சிவமணி மற்றும் அவருடன் இருந்தவர்கள் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததோடு, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். 
இது தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சினிமா நடிகர் சிவமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெரிய எலந்தம்பட்டை சேர்ந்த திருநாவுக்கரசு (49), கரும்பூரை சேர்ந்த ஸ்ரீதரன் (37), வீரப்பெருமாநல்லூரை சேர்ந்த பாக்கியராஜ் (39) ஆகியோரை கைது செய்தனர்.

Next Story