8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது


8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது
x
தினத்தந்தி 25 July 2021 5:24 AM GMT (Updated: 25 July 2021 5:24 AM GMT)

கோஷ்டி மோதல் வழக்கில் போலீசார் கைது செய்து விடுவார்கள் என பயந்து, 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர், சென்னை விமான நிலையத்தில் கைதானார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட்டு மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அப்போது கன்னியாகுமரியை சோ்ந்த தாதீயூஸ் (வயது 33) என்பவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, அவர் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஒரு கோஷ்டி மோதல், கொலை மிரட்டல், அடிதடி சண்டை போன்ற வழக்கில் போலீசாரிடம் சிக்காமல் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருவதும், அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருவதும் தெரிந்தது.

இதையடுத்து தாதீயூசை வெளியே விடாமல் குடியுரிமை அலுவலகத்தில் தங்க வைத்தனா். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், கோஷ்டி மோதல் வழக்கில் போலீசாா் தன்னை கைது செய்து விடுவாா்கள் என்ற பயத்தில் குவைத்துக்கு தப்பிச்சென்று வேலை செய்து வந்துள்ளார்.

தற்போது 8 ஆண்டுகளாகி விட்டதால் போலீசாா் வழக்குகளை மறந்து இருப்பாா்கள் என கருதி சொந்த ஊருக்கு செல்ல குவைத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்ததாக தெரிவித்தார்.

இதுபற்றி கன்னியாகுமரி மாவட்ட போலீசாருக்கு சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசார் சென்னை வந்து கைதான தாதீயூசை அழைத்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story