காவிரி ஆற்றில் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு


காவிரி ஆற்றில் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 25 July 2021 7:31 PM GMT (Updated: 25 July 2021 7:31 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பென்னாகரம்:

கனமழை
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு
மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான சத்திரம், முதலைப்பண்ணை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணிதுவைக்கவோ செல்லக்கூடாது என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு செல்வதை தடுக்கும் வகையில் பென்னாகரம் பிரிவு சாலை, மடம் சோதனைச்சாவடி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் வெளியூர்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு கார், இருசக்கர வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர்.

Next Story