4 வழிச்சாலை பணிக்கு இடம் கையகப்படுத்துவதற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


4 வழிச்சாலை பணிக்கு இடம் கையகப்படுத்துவதற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 26 July 2021 4:58 PM GMT (Updated: 26 July 2021 4:58 PM GMT)

வழிச்சாலை பணிக்கு இடம் கையகப்படுத்துவதற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், மாரிமுத்து தலைமையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சாலை விரிவாக்க பணிக்காக இடம் கையகப்படுத்தப்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள், மாவட்ட கலெக்டர் டி.மோகனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான்கு வழிச்சாலை பணி

புதுச்சேரி- விழுப்புரம்- கடலூர்- நாகப்பட்டினம் நான்கு வழிப்பாதை அமைப்பதற்கு கடந்த 2015-ம் ஆண்டு எங்கள் கிராமத்தில் உள்ள நிலங்கள், வீட்டுமனைகள், கட்டிடங்கள் நெடுஞ்சாலை துறையினரால் அளவீடு செய்யப்பட்டன.

 அப்போது எங்கள் ஊருக்கு 1 சதுரடிக்கு எவ்வளவு தொகை தருவீர்கள் என்று கேட்டதற்கு மதிப்பீடு செய்யவில்லை என்று கூறி கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை எவ்வளவு தொகை என்பதை தெரிவிக்கவில்லை.

 உரிய இழப்பீடு

ஆனால் தற்போது, குறைந்த அளவே இழப்பீட்டு தொகை தருவதாக கூறுகிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து எங்கள் ஊருக்கு அதிக இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும் என்று முறையிட்டிருந்தோம். ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்,  கடந்த 2 வாரங்களாக நெடுஞ்சாலைத்துறையால் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் வீடு, கட்டிடங்கள், நிலங்களை இன்னும் 2 வாரத்திற்குள் காலி செய்ய வேண்டுமென்று வாய்மொழியாக கூறி வருகின்றனர். 

நாங்கள் 2 முறை மேல்முறையீடு செய்தும் எங்களுக்கு உரிய இழப்பீடு இன்னும் வந்து சேரவில்லை. நாங்கள் வீடு, மனைகளை காலி செய்வதற்கு இன்னும் 3 மாதங்கள் கால அவகாசம் தேவை. அதற்குள் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஆவண செய்ய வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். 

மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார். அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story