திருமூர்த்தி அணையில் இருந்து 4 ம் மண்டல பாசனத்திற்கு 3 ந் தேதி தண்ணீர் திறப்பு


திருமூர்த்தி அணையில் இருந்து 4 ம் மண்டல பாசனத்திற்கு 3 ந் தேதி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 26 July 2021 5:00 PM GMT (Updated: 26 July 2021 5:00 PM GMT)

திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு வருகிற 3-ந் தேதி தண்ணீர் திறக்க உள்ளதாக விவசாயிகளுடன் நடந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு வருகிற 3-ந் தேதி தண்ணீர் திறக்க உள்ளதாக விவசாயிகளுடன் நடந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

பி.ஏ.பி. திட்டம் 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 4-ம் மண்டலமாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 

3-ம் மண்டல பாசனத்தில் வழங்கப்பட்ட 5-வது சுற்று தண்ணீர் கடந்த மே மாதம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மழையின் காரண மாக காண்டூர் கால்வாயில் மண் சரிவு ஏற்பட்டதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. 

விவசாயிகள் மனு 

இந்த நிலையில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி பி.ஏ.பி. விவசாயிகள் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்தனர். 

இங்கு பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமியிடம், திருநீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமையில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

பின்னர் அதிகாரிகளுடன், விவசாயிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது தொகுப்பு அணைகளில் தற்போது உள்ள நீர்இருப்பு மற்றும் நீர்வரத்து ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

3-ந் தேதி தண்ணீர் திறப்பு 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 4-ம் மண்டல பாசனத்திற்கு வருகிற 3-ந் தேதி தண்ணீர் வழங்கவும், அதைதொடர்ந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு 5-சுற்று தண்ணீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகளுடன் நடத்திய ஆலோசனையில் 3-ந் தேதி தண்ணீர் திறப்பது குறித்துமுடிவு செய்யப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். அரசு உத்தரவு கிடைத்ததும் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்றனர்.


Next Story