திருமருகல் பஸ் நிலையத்தில் காட்சி பொருளாக காணப்படும் உயர் கோபுர மின்விளக்கு ஒளிருமா? பயணிகள் எதிர்பார்ப்பு


திருமருகல் பஸ் நிலையத்தில் காட்சி பொருளாக காணப்படும் உயர் கோபுர மின்விளக்கு ஒளிருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 July 2021 5:01 PM GMT (Updated: 26 July 2021 5:01 PM GMT)

திருமருகல் பஸ் நிலையத்தில் காட்சி பொருளாக காணப்படும் உயர் கோபுர மின்விளக்கு ஒளிருமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திட்டச்சேரி, 

நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைந்துள்ளது. திருமருகல், சேகல், மருங்கூர், சீயாத்தமங்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பயணிகள் நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வர திருமருகல் பஸ் நிலையத்திற்கு வருகின்றனர்.

இதனால் இங்கு ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அதிகம் திருமருகலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பஸ் நிலையத்தின் மையப்பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து ஒளிராமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருளாக காணப்படுவதால் பெண்கள் இந்த வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர். இதை பயன்படுத்தி கொள்ளையர்கள் வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இந்த உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், திருமருகல் பஸ் நிலையத்தில் காட்சிப்பொருளாக காணப்படும் உயர் கோபுர மின் விளக்கை சீரமைத்து மீண்டும் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story