சுல்தான்பேட்டை அருகே குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது


சுல்தான்பேட்டை அருகே குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது
x
தினத்தந்தி 26 July 2021 5:13 PM GMT (Updated: 26 July 2021 5:13 PM GMT)

சுல்தான்பேட்டை அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய நெசவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்த 75 லிட்டர் ஊறலும் பறிமுதல் செய்ப்பட்டது.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய நெசவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்த75 லிட்டர் ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டது. 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

வாகன சோதனை 

காமநாயக்கன்பாளையம் போலீசார் பல்லடம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் அவர் கேன் வைத்து இருந்தார். 

கள்ளச்சாராயம் காய்ச்சினார் 

உடனே போலீசார் அந்த கேனை திறந்து பார்த்தபோது அதற்குள் கள்ளச்சாராயம் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். 

அதில் அவர், சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரியை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 34) என்பது தெரியவந்தது. 

தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், நெசவு தொழில் செய்து வரும் அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாததால் வீட்டில் குக்கர் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

கைது செய்தனர் 

இதையடுத்து போலீசார் சுந்தர்ராஜை, சுல்தான்பேட்டை போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்ததுடன், அவர் வைத் திருந்த 6 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து சுந்தர்ராஜ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 75 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் அடுப்பு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 


Next Story