போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்


போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
x
தினத்தந்தி 26 July 2021 5:35 PM GMT (Updated: 26 July 2021 5:35 PM GMT)

காரைக்குடி பகுதியில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை கோசாலையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி
காரைக்குடி பகுதியில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை கோசாலையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலையில் திரியும் மாடுகள்
காரைக்குடி நகர் பகுதியில் சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்தநிலையில் காரைக்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான பசு மற்றும் காளை மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்து வருகின்றன. காரைக்குடி கல்லூரிச்சாலை, செக்காலை, புதிய பஸ் நிலையம், பெரியார் சிலை பகுதி, பழைய பஸ் நிலையம், கழனிவாசல், கோட்டையூர் சாலை உள்ளிட்ட பகுதியில் கூட்டம், கூட்டமாக மாடுகள் சுற்றித்திரிந்து வருகிறது. 
ேமலும் காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் ரெயில் தண்டவாள பகுதியில் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன.. இதனால் அவ்வப்போது ரெயிலில் அடிப்பட்டு மாடுகள் பலியாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்குடி பொன்நகர் ரெயில்வே கேட் அருகே சுற்றித்திரிந்த மாடுகள் மீது ரெயில் மோதியதில் 9 மாடுகள் இறந்தன.
நடவடிக்கை தேவை
இதுதவிர சாலையின் நடுவில் மாடுகள் இரவு நேரங்களில் படுத்துக்கொள்வதால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் எதிர்பாராதவிதமாக மாடுகள் மீது மோதி கீேழு விழும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் அதிகாலை நேரங்களில் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதால் வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் புறப்படுவதில் காலதாதம் ஏற்பட்டு வருகிறது. 
இதுகுறித்து காரைக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரகாஷ் கூறும்போது, காரைக்குடி பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்து வருகிறது.  இந்த மாடுகள் யாருடையது என்ற விவரம் சரிவர தெரிவதில்லை. தண்டவாளங்களில் சுற்றித்திரியும் மாடுகள் ரெயிலில் அடிப்பட்டு உயிர் பலியாகும் சம்பவம் நடந்துள்ளது. எனவே போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மாவட்டத்தில் உள்ள கோசாலையில் அடைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story