2½ வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி சாவு


2½ வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி  சாவு
x
தினத்தந்தி 26 July 2021 7:00 PM GMT (Updated: 26 July 2021 7:00 PM GMT)

க.பரமத்தி அருகே வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2½ வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.

க.பரமத்தி
2½ வயது குழந்தை 
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி அஞ்சலி. இவர்களுக்கு பிரணவ் என்கிற கார்த்தி (வயது 2½) என்ற மகன் இருந்தான். 
இந்தநிலையில் அஞ்சலிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இதனால் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே குப்பம்- சாலிபாளையத்தில் உள்ள தனது அண்ணன் மணிகண்டன் வீட்டில் தனது மகன் பிரணவ்வை விட்டு சென்றுள்ளார். 
போலீசார் வழக்கு
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த பிரணவ்வை காணவில்லை. இதனையடுத்து அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லையாம்.     இதுகுறித்து க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து குழந்தையை தேடி வந்தனர்.
தண்ணீர் தொட்டியில் மூழ்கி சாவு
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டனின் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு குழந்தை பிணமாக மிதந்தது. இதையறிந்த பிரணவ் உறவினர்கள் பதறி அடித்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு பிணமாக மிதந்தது காணாமல் போன குழந்தை பிரணவ் என்பதும், அவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்்ததும் தெரியவந்தது. குழந்தையின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
சோகம்
இதுகுறித்து க.பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தை பிரணவ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story