கல்லால் தாக்கி தி.மு.க. பிரமுகர் கொலை


கல்லால் தாக்கி தி.மு.க. பிரமுகர் கொலை
x
தினத்தந்தி 26 July 2021 10:46 PM GMT (Updated: 26 July 2021 10:46 PM GMT)

குன்னூரில் தொழில் போட்டியால் கல்லால் தாக்கி தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

குன்னூரில் தொழில் போட்டியால் கல்லால் தாக்கி தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தகராறு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் நடராஜ்(வயது 68). தி.மு.க. கிளை செயலாளர். இவர் தனது வீட்டின் முன்புறம் மளிகை கடை நடத்தி வந்தார். அதனருகில் முத்துக்குமார் (66) என்பவரும் மளிகை கடை வைத்து உள்ளார்.

இதற்கிடையே 2 கடைகளிலும் காய்கறிகள் விற்பனை செய்வது தொடர்பாக நடராஜ் மற்றும் முத்துக்குமார் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் கீழே கிடந்த கல்லை எடுத்து நடராஜின் தலையில் தாக்கினார். 

இதில் படுகாயம் அடைந்த நடராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நடராஜ் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் மேல்குன்னூர் போலீசார் முத்துக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட தகராறில் நட ராஜை கல்லால் தாக்கி அவர் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். 

பின்னர் கொலை வழக்குப்பதிந்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story