பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் - ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேச்சு


பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் - ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 27 July 2021 2:55 PM GMT (Updated: 27 July 2021 2:55 PM GMT)

பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என்று, ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.

மன்னார்குடி,

மன்னார்குடி நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் நகர சபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மன்னார்குடி ஒன்றிய குழு தலைவர் டி.மனோகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கா.தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும், 7 பேரூராட்சிகளிலும் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போதைய தி.மு.க. ஆட்சியில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகிறார்கள். காவிரி டெல்டா பகுதியில் நடைபெறும் குறுவை சாகுபடியை பாதுகாக்கும் வகையில் உரம், பூச்சி மருந்துகள் போதிய அளவில் இல்லை. மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறந்து விட்டால் மட்டும் போதும் என தி.மு.க அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது.

அ.தி.மு.க.வினர் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை தி.மு.க. அரசு கைவிட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் நாளை(புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்து மன்னார்குடி நகரசபையை கைப்பற்ற பாடுபடுவது, அ.தி.மு.க நிர்வாகிகள் மீது வழக்கு தொடரும் தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.கலைவாணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் பைங்காநாடு ராதாகிருஷ்ணன், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் டி.என்.பாஸ்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர துணைச்செயலாளர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

Next Story