கணவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற பெண்


கணவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற பெண்
x
கணவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற பெண்
தினத்தந்தி 27 July 2021 3:24 PM GMT (Updated: 27 July 2021 3:24 PM GMT)

கணவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற பெண்

கோவை

காதல் திருமணம்
கோவை அருகே ஒண்டிபுதூர் அருகே உள்ள நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சேதுராஜாராம் சிங் (வயது 29). ஆன்லைன் வர்த்தகம் செய்கிறார். இவரது மனைவி சவுந்தர்யா (25). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 
சவுந்தர்யா கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.சேதுராஜராம் சிங்குக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதன்காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதனிடையே சவுந்தர்யாவிற்கு நீலிக்கோணம்பாளையம் பகுதியை சேர்ந்த டிரைவர் குணசேகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளிடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

கண்டிப்பு
இதனால் கள்ளகாதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் சேதுராஜாராம் சிங்குக்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார். 

இதனால் அவர், அந்த கள்ளக்காதலை கைவிடக்கோரி மனைவி சவுந்தர்யாவை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே சவுந்தர்யா கடந்த 23 -ந் தேதி கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கணவன், மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனிடையே சவுந்தர்யா தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதைதொடர்ந்து  கணவர் சேதுராஜாராம் மனைவியுடனே வாழ விரும்பி, மாமியார் வீட்டிற்கு சென்று தனது மனைவியை அழைத்து உள்ளார். 

அப்போது அவர், நீ வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மனைவியை பார்த்து கூறி உள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவி்லலை. இதனால் சேது ராஜாராம் கவலையுடன் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

கொலை செய்ய முயற்சி

இந்த நிலையில் கணவர் உயிருடன் இருந்தால் கள்ளக்காதலுடன் நிம்மதியாக வாழமுடியாது என்று கருதிய சவுந்தர்யா, கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

 இதனை தொடர்ந்து சம்பவத்தன்று இரவு சவுந்தர்யா கணவரது  வீட்டுக்கு சென்றார். அப்போது சேது ராஜாராம் தனியாக தூங்கி கொண்டிருப்பதை அறிந்த சவுந்தர்யா, இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி தனது கள்ளக்காதலன் குணசேகரனுக்கு போன் செய்து அழைத்து உள்ளார்.

குணசேகரன் தனது நண்பர்கள் 4 பேரை அழைத்து கொண்டு அங்கு சென்றார். இதனை தொடர்ந்து சேது ராஜாராமை தூக்கத்திலே தீர்த்துக்கட்ட நினைத்தனர். அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சேதுராஜராம் சிங்கின் கழுத்தை அரிவாளால் அறுக்க தொடங்கினர்.  

அப்போது சவுந்தர்யாவும் அங்கிருந்தார்.  இதனை சற்றும் எதிர்பார்க்காத சேதுராஜாராம் திடீரென வலி தாங்க முடியாமல் தூக்கம் கலைந்து எழுந்து அலறி துடித்தார். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத குணசேரகன் மற்றும் அவரது நண்பர்கள் பயந்து விட்டனர். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவரின் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

 நாடகம்
அப்போது ரத்தம் சொட்ட, சொட்ட மயக்க நிலையில் சேதுராஜாராம் சிங், உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
அப்போது அங்கிருந்த சவுந்தர்யா, அவர்களிடம்,தனது கணவர் கீழே விழுந்ததில் காயம் அடைந்து விட்டதாக கூறினார். பின்னர் அவர்கள் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்த டாக்டர்களிடமும் கணவர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக சவுந்தர்யா கூறி ஆஸ்பத்திரியில் நாடகம் ஆடினார். டாக்டர்களும் காயம் அடைந்த சேதுராஜராம் சிங்குக்கு சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து  சேது ராஜாராம் மயக்கம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்தார். 

அப்போது அவர், தன்னை மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் மற்றும் சிலருடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதாக டாக்டர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் கோவை சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

கள்ளக்காதலன்-பெண் கைது

இந்த தகவலின் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் சவுந்தர்யாவை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கள்ளக்காதலன் மூலம் கணவரை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. 

இதையடுத்து சவுந்தர்யா, அவரது கள்ளக்காதலன் குணசேகரன், 4 சிறுவர்கள் என 6 பேரை கைது செய்தனர். கணவரின் கழுத்தை அறுத்து பெண்கொலை செய்ய முயன்று, திட்டம் தோல்வியில் முடிந்ததால் நாடகமாடிய நம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story