கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது


கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 27 July 2021 3:45 PM GMT (Updated: 27 July 2021 3:45 PM GMT)

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.

தேனி :
தேனி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 3 லட்சத்தை நேற்று கடந்தது. நேற்று மாலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 929 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வயது வாரியாக...
அதன்படி 2 லட்சத்து 64 ஆயிரத்து 723 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 38 ஆயிரத்து 206 பேருக்கு இரு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 158 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 32 ஆயிரத்து 771 டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. ஆண்களை விடவும் பெண்களே அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த வயதினர் 1 லட்சத்து 51 ஆயிரத்து 941 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 45 வயது முதல் 60 வயது வரையுள்ள 91 ஆயிரத்து 373 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 59 ஆயிரத்து 615 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
10 பேர் பாதிப்பு
தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 875 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 514 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்ததில் நேற்று 17 பேர் குணமாகினர். 183 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story