வீட்டின் முன் 12 அடி உயர கஞ்சா செடி வளர்த்தவர் கைது


வீட்டின் முன் 12 அடி உயர கஞ்சா செடி வளர்த்தவர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 3:48 PM GMT (Updated: 27 July 2021 3:48 PM GMT)

திருக்கனூர் அருகே வீட்டின் முன் அலங்கார செடிகளுக்கு மத்தியில் 12 அடி உயர கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனூர், ஜூலை
திருக்கனூர் அருகே வீட்டின் முன் அலங்கார செடிகளுக்கு மத்தியில் 12 அடி உயர கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
புதுவையில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க ஆபரேஷன் விடியல் என்ற திட்டத்தை கூடுதல் டி.ஜி.பி. ஆனந்தமோகன் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் களம் இறங்கினர்.
இந்தநிலையில் திருக்கனூர் அருகே உள்ள சந்தைப்புதுக்குப்பத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக ஞானமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்தபோது, சந்தைபுதுக்குப்பம் பால் சொசைட்டி வீதியை சேர்ந்த நாகராஜ் (வயது 22) கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
வாலிபர் கைது
இந்தநிலையில் புதுவை தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார், நாகராஜ் வீட்டில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது யாரும் சந்தேகப்படாதபடி வீட்டின் முன்பு அலங்கார செடிகளுடன் 12 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளர்த்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை பிடுங்கி போலீசார் அழித்தனர். 
இது தொடர்பாக நாகராஜை கைது செய்து காட்டேரிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story