கூடலூரில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்


கூடலூரில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்
x
தினத்தந்தி 27 July 2021 4:57 PM GMT (Updated: 27 July 2021 4:57 PM GMT)

கூடலூரில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள 22 பேரிடம் சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.

கூடலூர்

கூடலூரில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள 22 பேரிடம் சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.

4 பேருக்கு டெங்கு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் மெதுவாக திரும்புகிறது. இந்த நிலையில் கூடலூர் காசிம்வயல் பகுதியை சேர்ந்த 4 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

 இதைத்தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் குணமடையவில்லை. இதைத்தொடர்ந்து ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து காசிம்வயல் பகுதியில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது தண்ணீர் தொட்டிகளில் புழுக்கள் உள்ளதா என பார்வையிட்டனர். மேலும் தூய்மை பணியாளர்கள் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனை

தொடர்ந்து மருத்துவர் லோகேஷ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் சுகாதாரத்துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த 22 பேரிடம் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் பழைய தேவையில்லாத பொருட்களை திறந்தவெளியில் வீசக்கூடாது. வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து பருக வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

Next Story