நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி


நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி
x
தினத்தந்தி 27 July 2021 6:31 PM GMT (Updated: 27 July 2021 6:31 PM GMT)

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் சுதந்திர தினம் முதல் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் சுதந்திர தினம் முதல் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரும் சவால்
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி பலர் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் பலியாகினர். அரசின் தீவிர நடவடிக் கையின் பயனாக கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இந்த 2- வது பரவலின்போது பெரும்பாலானோர் உடலில் ஆக்சிஜன் குறைவால் மூச்சுதிணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானது குறிப்பிடத்தக்கது. ஆக்சிஜன் பற்றாக்குறை இந்த முறை பெரும் சவாலாக இருந்தது. 
இதனை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் தேவையை தன்னிறைவு பெறச்செய்யும் வகையில் அரசு அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது 11 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. இதில் பாண்டிச்சேரியில் இருந்து தனியார் நிறுவனத்தினர் லாரியில் ஆக்சிஜன் கொண்டு வந்து நிரப்பி செல்கின்றனர். 
நடவடிக்கை
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியின் தேவை மற்றும் 3-வது அலையை முன்எச்சரிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கண்காணிப் பாளர் டாக்டர் மலர்வண்ணன் கூறியதாவது:- ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் இரவு-பகலாக நடைபெற்று வருகிறது. நகாய் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் இதற்கான கட்டிட பணிகளும், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி மைய எந்திரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையை எட்டி உள்ளன.
3-வது அலை 
வருகிற சுதந்திர தினத்தன்று இந்த மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும். காற்றின் மூலம் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுஉள்ளது. இதன்மூலம் வரும் காலங்களில் 3-வது அலையை முன்எச்சரிக்கையுடன் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு என்ற நிலை இல்லாத வகையில் மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உள்ளதால் இனி தனியாரிடம் இருந்து ஆக்சிஜன் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story