கழிவுநீர் தொட்டியில் விழுந்த சினை பசு உயிருடன் மீட்பு


கழிவுநீர் தொட்டியில் விழுந்த சினை பசு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 27 July 2021 8:28 PM GMT (Updated: 27 July 2021 8:28 PM GMT)

கழிவுநீர் தொட்டியில் விழுந்த சினை பசு உயிருடன் மீட்கப்பட்டது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தில் வசிப்பவர் சேகர். இவருக்கு சொந்தமான சினை பசு ஒன்று நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. அந்த மாடு, அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது வீட்டு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள உரை கிணறு போன்ற கழிவுநீர் தொட்டியின் மீது ஏறி நடந்தபோது, கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்ததில் சுமார் 20 அடி ஆழ கழிவுநீர் தொட்டிக்குள் மாடு தவறி விழுந்தது. சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் கழிவுநீர் தொட்டிக்குள் மாடு விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உடனடியாக தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் பசுமாட்டை பத்திரமாக மீட்க போராடினர். 2 அடி அகலம் மட்டுமே இருந்ததால் கழிவுநீர் தொட்டியில் அந்த மாடு சுருண்ட நிலையில் கிடந்தது. இதையடுத்து ரவிச்சந்திரன், அர்ஜூனன் ஆகிய தீயணைப்பு வீரர்கள், கழிவுநீர் தொட்டிக்குள் ஏணி வைத்து இறங்கி மாட்டை கயிறுகளால் பிணைத்துக் கட்டினர். பின்னர் மேலே ஏறி வந்து சிறிது சிறிதாக தூக்கி, கிராம மக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குறுகிய இடமாக இருந்ததால் மாட்டை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் தீயணைப்பு வீரர்கள் சாதுரியமாக செயல்பட்டு, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த மாட்டை உயிருடன் மீட்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை பாராட்டினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story