சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு 2-ம் தவணை தடுப்பூசி கலெக்டர் தகவல்


சேலம் மாவட்டத்தில்  இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு 2-ம் தவணை தடுப்பூசி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 July 2021 8:41 PM GMT (Updated: 27 July 2021 8:41 PM GMT)

சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்
சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்டு தடுப்பூசிகள்
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) 138 மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது முகாமில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 84 நாட்கள் முடிந்தவர்களுக்கு மட்டும் செலுத்தப்படுகிறது. இதற்காக 17 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரப்பெற்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள்
ஆகையால் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு முககவசம் அணிந்து நேரில் சென்று அங்கு சமூக இடைவெளியை பின்பற்றி 2-ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடப்படுகிறது.
தற்போது கையிருப்பு இல்லாத காரணத்தினால் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த முடியவில்லை. மேலும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளும் கையிருப்பு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story