கர்நாடக அணைகளில் இருந்து 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது


கர்நாடக அணைகளில் இருந்து 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
x
தினத்தந்தி 28 July 2021 4:01 PM GMT (Updated: 28 July 2021 4:01 PM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

பென்னாகரம்:
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்  அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பருவமழை
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
தீவிர கண்காணிப்பு
காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் அங்குள்ள 2 அணைகளில் இருந்தும் நேற்று காலை வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று நள்ளிரவு ஒகேனக்கல்லை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story