மருந்து கடையில் திருடிய வியாபாரி கைது


மருந்து கடையில் திருடிய வியாபாரி கைது
x
தினத்தந்தி 28 July 2021 5:04 PM GMT (Updated: 28 July 2021 5:04 PM GMT)

பெரியகுளத்தில் மருந்து கடையில் திருடிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

பெரியகுளம்:

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் மோகன். இவர், தென்கரை மூன்றாந்தல் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடந்த 25-ந்தேதியன்று அந்த கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த பணத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று விட்டார். 

இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் மருந்து கடையில் பொருத்திருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பையுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

 அதனை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் அந்த நபரை பிடிக்க, பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்த தனிப்படை போலீசார். விசாரணை நடத்தியதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்செங்கோட்டில் அதே நபர் மருந்து கடையில் திருடியது தெரியவந்தது. 

மேலும் அவர், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அட்டங்குளக்கராவினையை சேர்ந்த சாகுல்அமீது (வயது 55) என்று தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் திருவனந்தபுரத்துக்கு சென்று, சாகுல் அமீதை கைது செய்தனர். அவரிடம் இருந்து, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

 துணி வியாபாரியான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியகுளம் பகுதியில் நோட்டமிட்டு இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

Next Story