தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2021 6:33 PM GMT (Updated: 28 July 2021 6:33 PM GMT)

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கரூர்
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது. தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று காலை அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில், கரூர்-கோவை ரோட்டில் உள்ள கரூர் மில்கேட் பஸ் நிறுத்தம் அருகே முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் பதாகைகளை கையில் ஏந்திவாறு கோஷங்களை எழுப்பினர். இதேபோல் கரூர் வெங்கமேடு, தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை
குளித்தலை நகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மருதூரில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் மருதூர் திருநாவுக்கரசு தலைமையிலும், குளித்தலை கிழக்கு ஒன்றிய பகுதியில் ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம், புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி தடாகோவிலில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதேபோல் கொடையூர், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம் , வெஞ்சமாங்கூடலூர் கீழ்பாகம், புங்கம்பாடி கீழ்பாகம், தெத்துப்பட்டி, எருமார்பட்டிபட்டி, ஈசநத்தம், அம்மாபட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் அ.தி.மு.க.வினர் தங்களது வீடுகள் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோகைமலை
தோகைமலை பஸ் நிலையம் தென்புறத்தில் தோகைமலை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் துரைக்கவுண்டர், ஒன்றியத்தலைவர் லதாரெங்கசாமி, ஒன்றிய துணைத்தலைவர் பாப்பாத்தி சின்னவழியான், மாவட்ட கவுன்சிலர் வசந்தாபழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், தலைவர்கள், துணைத்தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நொய்யல்
கரூர் மேற்கு ஒன்றியம் சார்பில் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், புன்னம் சத்திரம் பகுதியில் புன்னம் கூட்டுறவு வங்கி தலைவர் சுசீந்திரமூர்த்தி தலைமையிலும், வேலாயுதம்பாளையத்தில் புன்செய்புகளூர் பேரூர் கழக செயலாளர் கே.சி.எஸ். விவேகானந்தன் தலைமையிலும், புஞ்சை தோட்டக்குறிச்சியில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் அரவிந்தன் தலைமையிலும், காகிதபுரம் பகுதியில் கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், பேரூர் கழக செயலாளர் வக்கீல் சதாசிவம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் சரவணன், கூட்டுறவு வங்கி தலைவர் மணிவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நச்சலூர்-வேலாயுதம்பாளையம்
நச்சலூர் அருகே உள்ள நெய்தலூரில் தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.ஆர்.சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் பனையூர், நங்கவரம் பேரூராட்சி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
 வேலாயுதம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் மகளிர் அணி செயலாளர் தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் வேலாயுதம்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் தங்களது வீடுகள் மற்றும் தெருக்களில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
க.பரமத்தி-லாலாபேட்டை
க.பரமத்தி மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.ேக. செல்வக்குமார் தலைமையில் அவரது வீட்டின் முன்பும், க.பரமத்தி கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் மார்க்கண்டையன் தலைமையில் அவரது வீட்டின் முன்பும், க.பரமத்தி தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய அவைத்தலைவர் வீராச்சாமி தலைமையில் எலவனூரில் உள்ள ஒரு வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
லாலாபேட்டையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய கவுன்சிலர் பொன்னிஜெயபால் தலைமையில் அவரது வீட்டின் முன்பும், பாப்பக்காபட்டியில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் தலைமையில் அவரது வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கரூர் ஆவின்பால் பெருந்தலைவர் எம்.எஸ்.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story