தூத்தூர் ஊராட்சியில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தூத்தூர் ஊராட்சியில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 July 2021 8:07 PM GMT (Updated: 28 July 2021 8:07 PM GMT)

தூத்தூர் ஊராட்சியில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்லங்கோடு, 
தூத்தூர் ஊராட்சியில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்ஜீவன் திட்டம்
மத்திய அரசு நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை குமரி மாவட்டம் தூத்தூர் ஊராட்சியில் அமல்படுத்த மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்றதாக ெதரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி உறுப்பினர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். 
அதன்படி உறுப்பினர்கள் ரின்சி, ராணி, சோனா, லீலா, லத்தீஸ்மேரி, சபிதா, பெனடி, ஜோஸ்பில்பின், டிக்கோஸ்டன், ஜான் அலோசியஸ், அருள்தாஸ், ஜெயராஜ் ஆகிய 12 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக ஊராட்சி அலுவலகம் வந்தனர். அப்போது அலுவலகம் திறக்கப்படாமல் இருந்ததால் வெளியில் நின்று மத்திய அரசிற்கு எதிராகவும், ஊராட்சி மன்ற தலைவிக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். 
உள்ளிருப்பு போராட்டம்
பின்னர் மாலையில் அலுவலகம் திறக்கப்பட்டது. இதனையடுத்து உறுப்பினர்கள் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து உறுப்பினர்கள் கூறுகையில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை கைவிட்டு தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமே தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணியம்மாள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினை தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story