ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் நிலத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்


ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் நிலத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
x
தினத்தந்தி 28 July 2021 8:58 PM GMT (Updated: 28 July 2021 8:58 PM GMT)

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் நிலத்தில் இருந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பெரம்பலூர்
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 70). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவருக்கு பெரம்பலூர் அருகே கீழக்கணவாயில் சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் இருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 சந்தன மரங்களை கடந்த 23-ந் தேதி இரவு மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கண்ணன் நிலத்தின் அருகே உள்ள மற்றொருவரின் நிலத்தில் உள்ள சந்தன மரத்தையும் மர்ம நபர்கள் அறுத்து பார்த்துள்ளனர். அது முழு வளர்ச்சி அடையாததால் அதனை விட்டு சென்றனர். பெரம்பலுர் மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான காப்பு பகுதிகளிலும் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் கலெக்டர் அலுவலகத்திலும் கண்ணன் புகார் கொடுத்துள்ளார். இந்தநிலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற மர்ம நபர்களை பிடிக்க வனத்துறை சார்பிலும் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் வனத் துறையிலும், தனியார் நிலத்திலும் வளர்ந்துள்ள சந்தன மரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட உள்ளதாகவும் வனத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story