சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெடிகுண்டு, வீச்சரிவாளுடன் இருந்த 3 பேர் கைது


சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெடிகுண்டு, வீச்சரிவாளுடன் இருந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2021 5:23 AM GMT (Updated: 29 July 2021 5:23 AM GMT)

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெடிகுண்டு, வீச்சரிவாளுடன் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில்-ஒரகடம் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு மறைமலைநகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை போலீசார் வழிமறித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு வாலிபர் மட்டும் தப்பி ஓடி விட்டார். மற்ற 3 பேரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்த பையை சோதனை செய்த போது அந்த பையில் ஒரு நாட்டு வெடிகுண்டு, 2 வீச்சரிவாள் இருப்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள் திருக்கச்சூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த கிஷோர் (வயது 20), அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அழகேசன் (26), கொளத்தூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த சிவகுமார் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

எதற்காக நாட்டு வெடிகுண்டுகளுடன் சாலையில் சுற்றி கொண்டிருந்தனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் போலீசார் சோதனை செய்யும் போது தப்பி ஓடிய பொத்தேரி பகுதியை சேர்ந்த சந்துரு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story