கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்டம் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்டம் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 29 July 2021 12:19 PM GMT (Updated: 29 July 2021 12:19 PM GMT)

கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தை புறக்கணித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தை புறக்கணித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பஞ்சாயத்து யூனியன் கூட்டம்
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நேற்று தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் 14 கவுன்சிலர்கள், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் பாலசுப்பிரமணியன், சீனிவாசன், இன்ஜினியர் சித்ராதேவி, மேலாளர் முத்துப்பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கூட்டம் தொடங்கிவுடன், பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி எழுந்து, அ.தி.மு.க. சார்பில் போட்டி யிட்டு யூனியன் தலைவர் ஆன கஸ்தூரி சுப்புராஜ் தி.மு.க.வில் ேசர்ந்து இருக்கிறார். இதனால் தலைவருக்கு கொடுத்து வந்த ஆதரவை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் விலக்கிக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறுகிறோம்’ என்றார். அவருடன் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் விமலா தேவி, சண்முக்கனி இந்திரன், பூங்கோதை, ரஞ்சித், ராமர் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
இதனை தொடர்ந்து தி.மு.க. உள்ளிட்ட கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் கூட்டம் நடந்தது.
தீர்மானங்கள்
கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி சமீபத்தில் மரணமடைந்த சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் கி. ராஜநாராயணன் சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் அவர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.25 லட்சம்,  பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் பதித்து மேம்படுத்த ரூ.4 லட்சம் நிதியும் அனுமதிக்கப் பட்டது.
பஞ்சாயத்து யூனியன் பொது நிதியிலிருந்து 29 சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரமும், ஈராட்சி, கடலையூர், கீழ ஈரால், வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு ஒழிப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்ட தற்காலிக மஸ்தூர்களுக்கு ஜனவரி முதல் மே மாதம் முடிய சம்பளப்பணம் ரூ.17 லட்சத்து 39 ஆயிரத்து 200 வழங்கியதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

Next Story