திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தற்காலிக பல்நோக்கு பணியாளர்கள் 79 பேர் ‘திடீர்’ பணி நீக்கம்


திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தற்காலிக பல்நோக்கு பணியாளர்கள் 79 பேர் ‘திடீர்’ பணி நீக்கம்
x
தினத்தந்தி 29 July 2021 1:33 PM GMT (Updated: 29 July 2021 1:33 PM GMT)

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் தற்காலிகமாக சேர்க்கப்பட்ட பல்நோக்கு பணியாளர்கள் 79 பேர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

பல்ேநாக்கு பணியாளர்கள்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பணிக்கு உதவும் வகையில் பல்நோக்கு பணியாளர்கள் என்று நர்சு உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என பல்வேறு வேலைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்களாக 79 பேர் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட அவர்கள்  திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரியும் அவர்கள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் எங்களை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் தற்காலிக பணியாளர்களாக நியமித்தனர். 
 பணியாட்கள் தேவைக்கு ஏற்ப படி,படியாக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கொரோனா தொற்றின் 2-ம் அலையின் போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிலர் பணியமர்த்தப்பட்டனர். கொரோனா தொற்று காலத்தில் நாங்கள் எங்கள் குடும்பத்தையும் பார்க்காமல் தன்னலமின்றி பணியாற்றினோம். எங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எங்களுக்கு மாத சம்பளம் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை என சேர்த்து வழங்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென எங்களை பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறிவிட்டனர். இதனால் எங்கள் வாழ்வதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கோரிக்கை மனு

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Next Story