பணம் பறிக்கும் முயற்சியில் முதியவர் கொலை


பணம் பறிக்கும் முயற்சியில் முதியவர் கொலை
x
தினத்தந்தி 29 July 2021 2:46 PM GMT (Updated: 29 July 2021 2:46 PM GMT)

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த முதியவரிடம் பணம் பறிக்கும் முயற்சியில், அவரை தாக்கி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:

முதியவருடன் தகராறு

திண்டுக்கல் பஸ் நிலையத்தில், கரூர் பஸ்கள் நிற்கும் நடைமேடையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கினார். அவரிடம் ஒரு துணிப்பை இருந்தது. 

இந்தநிலையில் அதிகாலை 4 மணி அளவில் அங்கு வந்த 3 வாலிபர்கள், முதியவர் வைத்திருக்கும் துணிப்பையில் பணம் இருக்கலாம் என்று நினைத்து அதனை முதியவருக்கு தெரியாமல் எடுத்துச்செல்ல முயன்றனர். 
அப்போது முதியவர் திடுக்கிட்டு எழுந்து அவர்களை தடுத்தார். இதனால் 3 வாலிபர்களும் அவரை பிடித்து கீழே தள்ளிவிட்டு தகராறில் ஈடுபட்டனர். 
 
 துடி,துடித்து சாவு

பின்னர் துணிப்பையில் அவர்கள் பணத்தை தேடினர். ஆனால் அதில் பணம் எதுவும் இல்லை. அதில் ஒரு செல்போன், பல் துலக்கும் பிரஷ் மற்றும் துணிகள் மட்டுமே இருந்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், முதியவரிடம் சென்று பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டு மிரட்டினர். 

அதற்கு முதியவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. அதனை நம்பாத 3 வாலிபர்களும் சேர்ந்து முதியவரை சரமாரியாக தாக்கினர்.

 ஒரு கட்டத்தில் ஆத்திரம் தீராத வாலிபர் ஒருவர், முதியவரின் துணிப்பையில் இருந்த பிரஷ்சை எடுத்து அவரது தொண்டைக்குழியில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 

இதற்கிடையே முதியவரை 3 வாலிபர்கள் தாக்குவதை கண்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

  3 பேர் கைது  

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே முதியவரை கொலை செய்த 3 பேரும் பஸ்நிலையத்தில் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31), ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த மகேஷ் (26), பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த ஈஸ்வர பாண்டியன் (30) என்று தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பஸ்நிலையத்தில் பரபரப்பு

தாங்கள் தாக்கியதில் முதியவர் இறந்தது கூட தெரியாமல் அவர்கள் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்துள்ளனர். இதற்கிடையே  இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. 

இதுகுறித்த விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். பஸ்நிலையத்தில் முதியவர் கொலை செய்யப்பட்ட துணிகர சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-------

Next Story