கொரோனா தடுப்பூசி


கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 29 July 2021 6:12 PM GMT (Updated: 29 July 2021 6:12 PM GMT)

உடுமலையை அடுத்துள்ள ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்டவரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்துகிறார்கள்.

உடுமலை
உடுமலையை அடுத்துள்ள ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்டவரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்துகிறார்கள். 
கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்தநிலையில் அரசு உத்தரவுப்படி பொதுமக்களின் வசதிக்காக அவர்கள், தேர்தலின்போது வாக்களித்த வாக்குச்சாவடிகளிலேயே  கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முன்பு நகரபகுதிகளில் உள்ள பொதுமக்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்வந்தனர். ஊராட்சி பகுதிகளில் முதலில் ஆர்வம் குறைந்திருந்தது. இப்போது ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆர்வத்துடன் வருகின்றனர். இதைத்தொடர்ந்து பல்வேறு ஊராட்சி பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
போடிப்பட்டி ஊராட்சி
அதன்படி நேற்று உடுமலை அருகில் உள்ள போடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமில் 230 பேருக்கும், காமராஜர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமில் 200 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
இதுபோல் கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமில் 230 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் அதிகாலையிலேயே வந்து டோக்கன் வாங்கி சென்றனர். அதன்பிறகு மீண்டும் வந்து நீண்ட வரிசையில் நின்று சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
நகராட்சி பள்ளிகள்
உடுமலை நகராட்சி பகுதியில் பழனியாண்டவர் நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி, நெல்லுக்கடைவீதி நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும் நடந்த முகாம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 
இந்த 2 இடங்களில் நடந்த முகாம்களிலும் தலா 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story