ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு 500 பேர் வாழ்த்து செய்தி அனுப்பினர்


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு 500 பேர் வாழ்த்து செய்தி அனுப்பினர்
x
தினத்தந்தி 29 July 2021 6:24 PM GMT (Updated: 29 July 2021 6:24 PM GMT)

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு 500 பேர் வாழ்த்து செய்தி அனுப்பினர்

வேலூர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய்சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு, வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். வேலூர் மாவட்ட பொதுமக்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு இ-போஸ்ட் மூலம் வாழ்த்து செய்தி அனுப்ப தபால்துறை சிறப்பு ஏற்பாடு செய்தது. வேலூர் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் மீராபாய் சானுக்கு இ-போஸ்ட் மூலம் வாழ்த்து செய்தி அனுப்ப தனி கவுண்ட்டர் அமைக்கப்பட்டது. இ-போஸ்ட் அனுப்பும் நிகழ்ச்சிக்கு அஞ்சல் கண்காணிப்பாளர் கோமல்குமார் தலைமை தாங்கினார். தலைமை தபால் அதிகாரி சீனிவாசன், துணை தபால் கண்காணிப்பாளர் பிரதீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை முன்னாள் மல்யுத்த வீரரும், தபால்காரருமான தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். 

நேற்று ஒரேநாளில் 500-க்கும் மேற்பட்டோர் வாழ்த்து செய்தி அனுப்பினார்கள். பொதுமக்கள் ரூ.10 செலுத்தி இ-போஸ்ட் மூலம் மீராபாய் சானுவிற்கு வாழ்த்து செய்தி அனுப்பலாம். இந்திய ஒலிம்பிக் அணி வருகிற போட்டிகளில் வெற்றி பெறவும் வாழ்த்துகள் அனுப்பலாம். நாளை (சனிக்கிழமை) வரை இந்த சிறப்பு கவுண்ட்டர் செயல்படும் என்று தபால்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story