சேலத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


சேலத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 July 2021 8:56 PM GMT (Updated: 29 July 2021 8:56 PM GMT)

சேலத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண் இறந்ததால், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்
அறுவை சிகிச்சை
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 35). கடந்த சில நாட்களுக்கு முன்பு தனலட்சுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து அங்கு உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவரது கர்ப்பப்பையில் நீர் கட்டி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்து நீர் கட்டி அகற்றப்பட்டது. பின்னர் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இருந்து தனலட்சுமிக்கு சீழ் வந்து உள்ளது. இதனால் அவர் அதே தனியார் ஆஸ்பத்திரியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
சாவு
இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனலட்சுமி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். தனலட்சுமியின் உடலை பார்த்து தாமோதரன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்யாததால்தான் தனலட்சுமி இறந்ததாகவும், எனவே இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியும் அவர்கள் தனலட்சுமி உடலை வாங்க மறுத்தனர். மேலும் அவர்கள் சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள், உடலை பெற்றுச்சென்றனர்.


Next Story