திருச்சி மேலசிந்தாமணி குடியிருப்பு பகுதியில் தொப்புள் கொடியுடன் குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை


திருச்சி மேலசிந்தாமணி குடியிருப்பு பகுதியில் தொப்புள் கொடியுடன் குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை
x
தினத்தந்தி 30 July 2021 12:24 AM GMT (Updated: 30 July 2021 12:24 AM GMT)

திருச்சி மேலசிந்தாமணி குடியிருப்பு பகுதியில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் ஆண் குழந்தையை குப்பையில் வீசிச்சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யாா்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மலைக்கோட்டை,

திருச்சி மேலசிந்தாமணி குடியிருப்பு பகுதியில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் ஆண் குழந்தையை குப்பையில் வீசிச்சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யாா்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தையின் அழுகுரல்

திருச்சி மேலசிந்தாமணி பழைய கரூர் ரோடு பகுதியில் உள்ள புது பள்ளிவாசல் அருகே பக்ருதீன் என்பவரது வீட்டின் அருகே குப்பை கொட்டும் இடம் உள்ளது. இந்த இடத்தில் அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை வைத்து எடுத்து செல்வது வழக்கம்.

அதேபோல நேற்று காலை அதனை சுத்தம் செய்வதற்காக திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர் ஒருவர் வந்தார். அப்போது குப்பைகள் கொட்டிக் கிடக்கும் இடத்தில் ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

பச்சிளம் ஆண் குழந்தை

இதனால் அதிர்ச்சியடைந்த துப்புரவு பணியாளர் அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று குப்பையில் ஒரு துணியுடன் கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டு, தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. 

கல் நெஞ்சம் கொண்ட தாய்

பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை குப்பையில் வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?, தவறான உறவில் பிறந்த குழந்தையா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். குழந்தையை வீசி சென்றதாய் யாரென்று விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story