குருங்குளம் சர்க்கரை ஆலை முன்பு கையில் கரும்புகளோடு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


குருங்குளம் சர்க்கரை ஆலை முன்பு கையில் கரும்புகளோடு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.18 கோடியை வழங்க வலியுறுத்தி குருங்குளம் சர்க்கரை ஆலை முன்பு கையில் கரும்புகளோடு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வல்லம்,

தஞ்சை அருகே உள்ள குருங்குளத்தில் உள்ள சர்க்கரை ஆலையின் முன்பு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் பி.ராமசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் திருப்பதி, செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், 2020-2021 அரவை பருவத்துக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு உண்டான நிலுவைத் தொகை ரூ.18 கோடியை உடன் வழங்க வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலையை நடப்பு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.சர்க்கரை ஆலைப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது, எனவே அப்பகுதியில் நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். 

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும். கரும்பு விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், துணைத் தலைவர் கலியபெருமாள், துணை பொருளாளர்கள் அண்ணாதுரை, ராஜ்குமார் உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு கையில் கரும்புகளோடு கோஷங்களை எழுப்பினர்.

Next Story