கடலூர் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசாரை பொதுமக்கள் முற்றுகை


கடலூர் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசாரை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 July 2021 4:18 PM GMT (Updated: 30 July 2021 4:18 PM GMT)

கடலூர் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம்,

கடலூர் அடுத்த களையூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூக்கணாம்பாக்கம் போலீசார் நேற்று காலை களையூர் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது சிலர் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். மேலும் சிலர் மணலை கடத்திச் சென்று  கிராமத்திற்குள் மாட்டு வண்டிகளை நிறுத்தி வைத்திருந்தனர். இதைபார்த்த போலீசார் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ய முயன்றனர். 

முற்றுகை

இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென போலீசாரை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், நாங்கள் எங்கள் பகுதியில் கோவில் கட்டுவதற்காக மணல் எடுத்து செல்கிறோம். எனவே மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காிகால் பாரி சங்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

அப்போது முறைப்படி அனுமதி பெற்று மணல் எடுக்க வேண்டும், அனுமதியின்றி மணல் எடுப்பது குற்றச் செயலாகும். ஆகையால் போலீசார் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கு தடையாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மணல் கடத்தியது தொடர்பாக 6 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடா்பாக 6 பேர் மீது தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story