துணை மின் நிலையத்தை காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை


துணை மின் நிலையத்தை காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 30 July 2021 8:52 PM GMT (Updated: 30 July 2021 8:52 PM GMT)

துணை மின் நிலையத்தை காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த தேளூர் துணை மின் நிலையத்தில் இருந்து செட்டித்திருக்கோணம் கிராமத்திற்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அப்பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதானதால் மின்மோட்டாரை இயக்க முடியவில்லை. இதனால் தண்ணீரின்றி கரும்பு, உளுந்து, எள், கடலை ஆகிய பயிர்கள் காய்ந்தன. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் காய்ந்த பயிர்களை கையில் எடுத்து வந்து தேளூர் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகள் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் மின்மாற்றியை சீரமைக்கும் வரை தற்காலிகமாக மற்றொரு மின்மாற்றியில் இணைப்பு தருகிறோம். அதே சமயத்தில் மற்ற விவசாயிகளுடன் பேசி, மின் மோட்டாரை இயக்க வேண்டும் என்று கூறியதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Next Story