போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு


போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 31 July 2021 7:51 PM GMT (Updated: 31 July 2021 7:51 PM GMT)

குன்னம் போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னம்:

கணவரை பிரிந்து வாழ்ந்தார்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அகிலா(வயது 27). இவருக்கும், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்த பாரதி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு பரத்குமார் (9) என்ற மகனும், யாழினி (5) என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது தாயார் ராணி வீட்டில் அகிலா வசித்து வருகிறார்.
நகை-பணத்தை பெற்றுத்தருமாறு...
இந்நிலையில் வயலூரில் வசிக்கும் அமரதீபன்(29) என்பவருடன், அகிலாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த பிப்ரவரி மாதம் திருப்பூர் சென்றனர். இது குறித்து ராணி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மே மாதம் திருப்பூரில் தங்கியிருந்த அமரதீபன், அகிலா ஆகியோரிடம் விசாரித்தனர்.பின்னர் சமரசம் செய்து 2 பேரையும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அமரதீபனிடம் உள்ள 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை பெற்றுத்தருமாறு போலீசில் ராணி புகார் கொடுத்துள்ளார்.
தீக்குளிப்பு
இந்நிலையில் நேற்று அகிலா, ராணியுடன் குன்னம் போலீஸ் நிலையம் வந்து அமரதீபனிடம் இருந்து தனது 8 பவுன் நகை மற்றும் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று மீண்டும் புகார் கூறியுள்ளார். இது குறித்து போலீஸ் நிலையம் முன்பு அமரதீபன் மற்றும் அகிலாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அமரதீபனுக்கு ஆதரவாக போலீசார் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அகிலா, ஸ்கூட்டரில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றி எரிந்ததில் அவருக்கு தலை, கழுத்து, மார்பு பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
வாக்குமூலம்
இதையடுத்து போலீசார் தீயை அணைத்து, அகிலாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அகிலாவிடம், குன்னம் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நடுவர் சிவகாமி சந்தர் வாக்குமூலம் பெற்றார். இதற்கிடையே அகிலாவின் உடலில் தீப்பற்றி எரிந்தபோது, அவரை மீட்க முயன்ற அகிலாவின் அண்ணன் அசோக்ராஜ், பெண் ஏட்டு ரீத்தல் ஆகியோரின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
2 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருப்பித் தராததாக அமரதீபன், அவரது தம்பி அஜீத்(26) ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story