திருக்கோஷ்டியூர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா பக்தர்கள் இன்றி தொடங்கியது


திருக்கோஷ்டியூர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா பக்தர்கள் இன்றி தொடங்கியது
x
தினத்தந்தி 2 Aug 2021 6:13 PM GMT (Updated: 2 Aug 2021 6:13 PM GMT)

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா பக்தர்கள் இன்றி நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பத்தூர்,

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா பக்தர்கள் இன்றி நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆடிப்பூர திருவிழா

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தையொட்டி 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தினந்தோறும் இரவு பெருமாளும், ஆண்டாளும் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். 10-ம் திருவிழா அன்று மாலை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் விழா தொடங்கி உள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை பூர்வாங்க நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை கருடாழ்வார் எதிர்சேவையுடன் கோவில் கல்யாண மண்டபத்தில் சவுமிய நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுடன் அருள்பாலித்தார்.

தேரோட்டம் ரத்து

தொடர்ந்து கொடிமரத்தில் சிறப்பு தீபாராதனையுடன் கொடியேற்றப்பட்டு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக நேற்று முன்தினம் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு அனுமதி ரத்து செய்து இருந்தது.
இதனால் கோவிலில் பக்தர்கள் இன்றி இந்த கொடியேற்ற விழா எளிமையான முறையில் நடைபெற்றது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு கோவில் உள்பிரகாரங்களில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனா விதிமுறைகளின்படி 10-ம் நாள் நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் சமஸ்தான மேலாளர் இளங்கோ மேற்பார்வையில் கண்காணிப்பாளர் சேவற்கொடியான் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story