ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா


ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா
x
தினத்தந்தி 3 Aug 2021 8:40 PM GMT (Updated: 3 Aug 2021 8:40 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
ஆண்டாள் கோவில் 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் திருவிழா விமரிசையாக நடைபெறும். ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தையொட்டி இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில் வளாகத்திலேயே திருவிழா நடைபெற்றது.
ஆடிப்பூரம் தினத்தன்று தேர்திருவிழா நடைபெறாமல் கோவில் வளாகத்தில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.  இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரம் திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது.
கொடியேற்றம் 
கோவிலுக்குள் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு இருந்ததால் யாரும் அனுமதிக்கப்படவில்லை.  கோவில் தக்கார் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமசிவாயம், கோவில் நிர்வாக அதிகாரி இளங்கோவன், கோவில் பட்டர்கள் ஆகியோர் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டனர். ரகு பட்டர் பூஜைகளை செய்தார். 
கொடியேற்றத்தை முன்னிட்டு ஆண்டாள், ெரங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கோவில் வளாகத்துக்குள்ளேயே முதல் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
கொடியேற்று விழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் வெளியில் திரண்டு நின்று தரிசனம் செய்து சென்றனர்.
கொடியேற்றத்தையொட்டி ஆண்டாள் கோவில் யானைக்கு  காலில் கொலுசு, தலையில் நெத்திச்சூடி அணிவிக்கப்பட்டது.

Next Story