பழமையான கோவிலுக்கு அரசர் எழுதிவைத்த 400 ஏக்கர் நிலத்தையும், தாமிரப்பட்டயத்தையும் மீட்கக்கோரி வழக்கு


பழமையான கோவிலுக்கு அரசர் எழுதிவைத்த 400 ஏக்கர் நிலத்தையும், தாமிரப்பட்டயத்தையும் மீட்கக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 4 Aug 2021 1:08 PM GMT (Updated: 4 Aug 2021 1:08 PM GMT)

பழமையான கோவிலுக்கு அரசர் எழுதிவைத்த 400 ஏக்கர் நிலத்தையும், தாமிரப்பட்டயத்தையும் மீட்கக்கோரி வழக்கு பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. விஜயரகுநாத நாயக்கர் என்ற அரசரால் 1608-ம் ஆண்டில் இந்த கோவிலுக்கு 400 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இதற்காக தாமிரப்பட்டயம் எழுதிவைக்கப்பட்டது. இவை 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவில் நிர்வாகத்திடம் இருந்தன.

2019-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி அந்த தாமிரபபட்டயம் சென்னையில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அது மாயமாகிவிட்டது.

400 ஏக்கர் நிலத்தில் தற்போது கோவில் கட்டுப்பாட்டில் 7 ஏக்கர் மட்டுமே உள்ளது. இதுகுறித்து, மார்ச் 7-ந் தேதி தமிழ்நாடு அரசு மற்றும் அறநிலையத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நில அளவையரின் உதவியுடன் 400 ஏக்கர் நிலத்தையும், தாமிரப்பட்டயத்தையும் மீட்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.

Next Story