2 வீடுகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


2 வீடுகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 5 Aug 2021 8:25 PM GMT (Updated: 5 Aug 2021 8:25 PM GMT)

தா.பழூர் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

தா.பழூர்:

ரூ.20 ஆயிரம் திருட்டு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 43). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டு, மீண்டும் நேற்று வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் அனைத்துப் பூட்டுகளும் உடைந்து கிடந்த நிலையில், கதவு திறந்து கிடந்ததாக தெரிகிறது.
மேலும் வீட்டில் உள்ள மர பீரோ மற்றும் சூட்கேசில் இருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமார் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
போலீசார் விசாரணை
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமம் தெற்கு தெருவில் வசித்து வரும் பன்னீர் (65) நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு ஆடு மேய்ப்பதற்காக வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இரும்பு பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பன்னீர் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story