சட்டசபையில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் எம்.எல்.ஏ.க்கள் மேஜையில் கம்ப்யூட்டர் பொருத்தப்படுகிறது


சட்டசபையில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் எம்.எல்.ஏ.க்கள் மேஜையில் கம்ப்யூட்டர் பொருத்தப்படுகிறது
x
தினத்தந்தி 6 Aug 2021 2:56 PM GMT (Updated: 6 Aug 2021 2:56 PM GMT)

தமிழக சட்டசபையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் 13-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக எம்.எல்.ஏ.க்கள் மேஜையில் கம்ப்யூட்டர் பொருத்தப்படுகிறது.

சென்னை,

தமிழக அரசின் அனைத்து துறைகளும் படிப்படியாக மின் ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தத் துறைகளில் காதிதங்களின் புழக்கம் பெருமளவில் குறைந்திருக்கிறது. மேலும், மின் ஆளுமை மூலம் குறுகிய காலத்தில் தகவல் தொடர்பும் நடைபெற்றுவிடுகிறது.

அதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையிலும் இந்த நிலையை கையாள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. எனவே எம்.எல்.ஏ.க்களுக்கு அரசுத் துறைகளின் கொள்கை விளக்க குறிப்புகள், ஆண்டறிக்கைகள், கேள்வி பதில்கள் போன்ற பல பக்கங்களைக் கொண்ட விவரங்கள், புத்தகங்களாக அச்சிடப்படாமல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

சபாநாயகர் அறிவிப்பு

கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) காகிதவடிவில்தான் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை சட்டசபைக்குள் இந்தத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால் தற்போது காகித நடமாட்டத்தை குறைத்து எலக்ட்ரானிக் முறையை அவை நடவடிக்கைகளில் புகுத்த சட்டசபை செயலகம் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட், காதிக வடிவில் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

தற்போது 13-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை மின்னணு நிதிநிலை அறிக்கையாக (இ-பட்ஜெட்டாக) தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள், கலைவாணர் அரங்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சட்டசபையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.யின் இருக்கையிலும் கணினிகள் (சி.பி.யு. உள்ளடக்கிய ஆல் இன் ஒன் கம்ப்யூட்டர்) பொருத்தப்பட்டு வருகின்றன. எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமல்லாமல், சபாநாயகர், அரசு அதிகாரிகளின் இருக்கைகளிலும் அவை பொருத்தப்படுகின்றன.

பதிவிறக்கம்

முதன் முதலில் இ-பட்ஜெட் இமாசலபிரதேசத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. ஒடிசா, கேரளா மாநிலங்களும் இதை பின்பற்றி வருகின்றன. இதுபற்றி சட்டசபை அதிகாரிகள் கூறியதாவது:-

13-ந் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும், நிதித்துறை அமைச்சர் பட்ஜெட் அறிக்கையை வாசிக்கத் தொடங்கியதும், அந்த பட்ஜெட் முழுமையும் ‘வைபை' மூலம் எம்.எல்.ஏ.க்களின் கணினிகளுக்கு பதிவிறக்கம் செய்யப்படும். அவர் வாசிக்கும் வரிகள், பெரிய எழுத்துக்களில் திரையில் தோன்றும். அதை அவர்கள் பார்த்து பின்பற்றலாம்.

எம்.எல்.ஏ.க்களுக்கு ‘டேப்லெட்’ கணினியும் தரப்பட்டு இருக்கும். அதில், அந்த முழு பட்ஜெட் அறிக்கையும் பி.டி.எப். வடிவில் பதிவிடப்பட்டிருக்கும். அதையும் அவர்கள் பார்க்கலாம். அதோடு சட்டசபையில் உள்ளும், வெளியிலும் பெரிய திரைகளில் நிதிநிலை அறிக்கையின் வரிகள் திரையிடப்படும்.

ரூ.1 கோடி மீதம்

காகித வடிவிலும் பட்ஜெட் அச்சடிக்கப்பட்டு பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் அதை கேட்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும்.

இதற்காக 380 கணினிகள், ‘டேப்லெட்’கள் வாங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 14-ந் தேதி தாக்கலாகும் வேளாண்மைத் துறை பட்ஜெட் அறிக்கையும் இதே முறையில் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை பயன்டுத்துவது தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுக்கு சில தினங்களில், எம்.எல்.ஏ. விடுதியில் வைத்து பயிற்சி அளிக்கப்படும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முழுமையாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வரை காகித வடிவிலான பட்ஜெட் அறிக்கையும் தொடரும். காகிதமில்லா சட்டசபை திட்டத்தின் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை மீதமாகும். காகித தயாரிப்பிற்காக மரங்கள் வெட்டுவது வெகுவாக தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

13 மற்றும் 14-ந் தேதிகளில் 2 பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்படுவதால் அவை பற்றி விவாதிப்பதற்கு கூடுதல் நாட்கள் தேவைப்படும். எனவே சட்டசபை கூடும் நாட்கள் அதிகமாகும் என்று தெரிகிறது. இதுபற்றி 13-ந் தேதி கூடும் அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும்.

Next Story