கள்ளக்குறிச்சியில் தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 பவுன் நகையை அபேஸ் செய்தவர் கைது


கள்ளக்குறிச்சியில் தோஷம் கழிப்பதாக கூறி  மூதாட்டியிடம் 11 பவுன் நகையை அபேஸ் செய்தவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2021 4:51 PM GMT (Updated: 6 Aug 2021 4:51 PM GMT)

கள்ளக்குறிச்சியில் தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 பவுன் நகையை அபேஸ் செய்தவர் கைது குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியே வந்து கைவரிசை


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் போலீசார் கோட்டைமேடு பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக ஸ்கூட்டரில் வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பாரூக்(வயது 52) என தெரியவந்தது. மேலும் இவர் கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்த சீதாபதி மனைவி ராஜலட்சுமியிடம் தோஷம் கழிப்பதாக கூறி அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை அபேஸ் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாரூக்கை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஸ்கூட்டர் மற்றும் 11 பவுன் சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பாரூக் மீது சென்னை ,ஆம்பூர், கள்ளக்குறிச்சி, குடியாத்தம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 9 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி சிறையிலிருந்த அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்து கைவரிசை காட்டி இருப்பதும் தெரியவந்தது. 

Next Story